வாஷிங்டன்: 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருவதை வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி கிண்டல் செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையுடன் உள்ளது. இந்த நிலையில் கடைசி 2 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இரு அணிகளும் அமெரிக்கா சென்றடைந்துள்ளன. இதனிடையே இந்திய அணியின் இளம் வீரர்கள் பற்றி வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி பாராட்டி பேசியுள்ளார்.

அதில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். சஞ்சு சாம்சன் இளம் வீரராக இருந்தாலும், 8 ஆண்டுகள் அனுபவத்துடன் உள்ளார். அதற்கு காரணம் இந்திய அணி உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பு வலிமையாக இருப்பது தான். யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 9 போட்டிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசி இருக்கிறார்.
அங்கிருந்து டோமினிக்கா டெஸ்ட் போட்டியில் அவரை பார்க்கும் போது, அவர் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவத்துடன் உள்ளார். அதுதான் இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் என்பதை புரிந்துகொள்கிறேன். அதனாலேயே உலகத்தரம் வாய்ந்த வீரர்களை இந்திய அணியால் உருவாக்க முடிகிறது. ஆனால் இந்திய அணியால் கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதையும் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அந்த அணியில் இருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் மட்டுமே தற்போதைய அணியில் விளையாடி வருகின்றனர். இதனால் வரும் ஐசிசி உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.