மும்பை: டி20 உலகக்கோப்பை 2026 நாக் அவுட் சுற்றுகளில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்வதை தான் விரும்பவில்லை என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை விட பல மடங்கு மேலானது என குறிப்பிட்டுள்ள அஸ்வின், நாக் அவுட் சுற்றுகளில் இவ்விரு அணிகளும் மோதக்கூடாது என்பதே தமது விருப்பமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, குரூப் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சிறப்பான முறையில் வீழ்த்தியது. இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, வெறும் 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது.

இது குறித்து பேசிய அஸ்வின், "பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டாம் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு மிக மோசமான தோல்வி. அவர்கள் இறுதிப் போட்டிக்கு வந்தால், தங்கள் உத்திகளைச் சற்று சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். இந்தியா, பாகிஸ்தான் மோதல் இறுதிப் போட்டியில் நடைபெற நான் விரும்பவில்லை. அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் வேறு எந்த ஒரு அணியையும் ஏற்றுக்கொள்ளலாம்."
"ஆனால் நாக் அவுட் சுற்றுகளில் பாகிஸ்தான் வேண்டாம். ஒரு குறிப்பிட்ட நாளில், நடுநிலையான களத்தில், 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானை விட ஒரு அல்லது இரண்டு கண்டங்கள் முன்னால் உள்ளது" இந்த பிட்ச்சில் 175 ரன்கள் என்பது 250 ரண்களுக்கு சமமானது என்று நான் உணர்ந்தேன். இது ஒரு ஃபாலோ-ஆன் போன்றதாகும். டி20 போட்டிகளில் ஃபாலோ-ஆன் கட்டாயப்படுத்த வேண்டிய நிலை வந்தால், இதுதான் சரியான பிட்ச்."
"மேலும் 20 ரன்கள் கிடைத்திருந்தால், ஃபாலோ-ஆன் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும். பாகிஸ்தான் அணி பெரும் நெருக்கடியில் இருந்தது, அவர்களால் அந்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை இது இன்னிங்ஸ் தோல்வியாக மாறி இருக்கும்" என அஸ்வின் விமர்சித்தார்.
"நவாஸ் களமிறங்கியபோது, பாகிஸ்தான் ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடதுகை சுழற்பந்து வீச்சாளர் உங்களுக்கு ஒரு மேட்ச்-அப் ஆனவர், ஆனால் அவர் இரண்டு பந்துகளையும் தடுத்தாடியதோடு, ஒருமுறை பீட் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட நோக்கத்துடன் நீங்கள் டி20 கிரிக்கெட் விளையாடினால், அது மிகவும் கடினம்," என அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
"பாபர் அசாம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக விளையாடும் விதத்தைப் பாருங்கள். பாகிஸ்தான் ஒரு வருடத்திற்கு முன்பு அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பு தோற்ற பின்னரும் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லை. அமெரிக்காவில் நடந்த ஆட்டத்தில் பும்ராவின் பந்தில் அவர் பந்தை தள்ளிவிட்டு ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்திலும் அவர் மூன்றாவது ஃபீல்டர் திசையில் பந்தை அடித்தார். வர்ணனையாளர்கள் அதை ஒரு வழக்கமான பாபர் அசாம் ஆட்டம் என்று கூறினார்கள். ஆனால் இல்லை, இப்படி ஒவ்வொரு முறையும் விளையாடினால் அவர் நிச்சயம் அவுட் ஆவார். பாகிஸ்தான் யத்திகள் ரீதியாக சிறப்பாக இல்லை, மேலும் இந்தியாவை சவால் செய்ய அவர்களுக்குத் தேவையான திறமையான வீரர்கள் இல்லை. பிளாட் பிட்ச்சில் விளையாடினால் நிறைய ரன்கள் வரும். சுழல் மைதானத்தில் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை."
"போட்டி மனப்பான்மையை ஒருபுறம் வையுங்கள். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நன்றாக இருக்கும், ஆனால் இந்தியா வெகுதூரம் முன்னால் உள்ளது. இந்தியா தற்போது சில கண்டங்கள் முன்னால் உள்ளது," என்று அஸ்வின் தெரிவித்தார். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான் அணி தனது இறுதி குரூப் போட்டியில் நமீபியாவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும்.