
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
2019 ஆகஸ்ட் முதல் முதல் 2021 ஜூலை வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பல பகுதிகளாக நடத்த திட்டமிட்டு இருந்தது ஐசிசி. அதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் பாதி அளவு போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளன.

எப்படி நடக்கும்?
ஒவ்வொரு அணியும் ஆறு அணிகளுடன் டெஸ்ட் தொடரில் மோதும். ஒரு டெஸ்ட் தொடருக்கு 120 புள்ளிகள் அளிக்கப்படும். ஒன்பது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இரண்டு ஆண்டு காலத்தில் அந்த டெஸ்ட் தொடர்களை அணிகள் ஆடி முடித்திருக்க வேண்டும்.

டெஸ்ட் தொடர் குளறுபடி
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் பல அணிகளால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க முடியவில்லை. இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளன.

கடினம்
மற்ற அணிகள் இரண்டு டெஸ்ட் தொடர்களில் மட்டுமே ஆடி உள்ளன. இந்த நிலையில், ஜூலை 2021க்குள் இந்த தொடரை நடத்தி முடிப்பது கடினம் என்பதால் ஐசிசி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி இதுவரை பெற்ற புள்ளிகளை சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

புள்ளிகளின் சதவீதம்
முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகளை முடிவு செய்ய இனி புள்ளிகளின் சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் மூலம், ஆறு டெஸ்ட் தொடர்களில் ஆடாவிட்டாலும் ஆடிய தொடர்களின் மொத்த புள்ளிகளில், எத்தனை புள்ளிகளை அணிகள் பெற்றுள்ளதோ அந்த சதவீதத்தை வைத்து புள்ளிப் பட்டியல் மாறும்.

மாறிய கணக்கு
அந்த வகையில் 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, 75 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 296 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, 82.2 சதவீதத்துடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடர்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முடிவில் எந்த அணி அதிக புள்ளிகள் பெறுகிறதோ அதை வைத்து முதல் இரண்டு இடங்கள் மாற அதிக வாய்ப்பு உள்ளது.

வாய்ப்பை இழக்குமா?
இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் அதிக போட்டிகளில் தோற்றால் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு கீழே செல்ல வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழக்கும். இந்த நிலை இந்திய அணிக்கு ஏற்பட ஐசிசியின் புதிய விதி தான் காரணம்.

அதிர்ச்சி
ஐசிசி வேறு வழியின்றி இந்த விதியை அமல்படுத்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சிக்கல் இன்றி நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் போனால் அதற்கு இந்த விதிதான் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications