3வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 329 ரன்கள் குவிப்பு! ஷிகர் தவான் சதம், ராகுல் அரை சதம் விளாசல்
கண்டி: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ரன்களை குவித்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் இன்று துவங்கியது.
இதிலும் இந்திய அணிதான் 'டாஸ்' வென்றது. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, வழக்கம்போலவே, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர்.

ராகுல் அபாரம்
ராகுல் அரைசதம் (85) விளாசினார். அவர் தொடர்ச்சியாக விளாசும் 7வது அரை சதம் இது என்பதால் அந்த வகையில் சாதனையை படைத்தார். தவான் 119 ரன் விளாசி டெஸ்ட் போட்டித்தொடரில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார். வழக்கமாக சிறப்பாக ஆடும் புஜாரா (8) விரைந்து வெளியேறினார். ரகானே (17) புஷ்பகுமாரா சுழலில் வெளியேறினார்.

திடீர் விக்கெட் சரிவு
கேப்டன் கோஹ்லி (42) நிதானமாக ஆடியபோதும் அரை சதம் விளாசும் முன்பு அவுட்டானார். அஸ்வின், சகா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. இருப்பினும் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அஸ்வின் (31) தேவையற்று அவுட்டானார்.

ஸ்பின்னர் சிறப்பு
மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. சகா (13), பாண்டியா (1) ஆகியோர் களத்தில் உள்ளனர். இலங்கை அணி சார்பில் புஷ்பகுமாரா அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

ரன் குவிப்பு
விக்கெட் இழப்பின்றி இந்தியா, 188 ரன்கள் குவித்தபோது, பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை ஸ்பின்னர்கள் திறமையாக செயல்பட்டு ரன் குவிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


Click it and Unblock the Notifications