சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்த் இடையே நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து, 260 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் இழந்துள்ளது.
இந்தியா நான்காவது டெஸ்டில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முதல் இன்னிங்க்ஸில் புஜாரா சதம் அடிக்க இந்தியா 273 ரன்கள் குவித்தது. முன்னதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 27 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அலஸ்டர் குக்கை ஆட்டமிழக்கச் செய்து இங்கிலாந்தின் விக்கெட் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார் பும்ரா.
தொடர்ந்து இஷாந்த் மொயீன் அலியையும், ஷமி ஜென்னிங்க்ஸ் மற்றும் பேர்ஸ்டோவையும் அனுப்பி வைக்க இங்கிலாந்து 92 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தவித்து வந்தது. அடுத்து ஜோ ரூட், ஸ்டோக்ஸ் இணைந்து அணியை மீட்கும் வேலையில் இறங்கினர்.
அந்த கூட்டணி 30 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் ரன் ஓட ஜோ ரூட்டை அழைத்தார். ஆனால், பந்து அந்த ஓவரை வீசிய ஷமி கையில் சிக்கியது. அவர் ரூட் நின்று இருந்த விக்கெட்டில் நேரடியாக அடித்து ரன் அவுட் செய்தார்.
அதன் பின் வந்த பட்லர், மீண்டும் ஒரு பொறுப்பான இன்னிங்க்ஸ் ஆடினார். ஸ்டோக்ஸ் உடன் சேர்ந்து கூட்டணியாக 56 ரன்களும், சாம் கர்ரனுடன் சேர்ந்து 55 ரன்களும் குவித்தார். 69 ரன்களில் வெளியேறினார் பட்லர்.
இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 260 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் இழந்து இருக்கிறது. சாம் கர்ரன் 37 ரன்கள் அடித்து களத்தில் இருக்கிறார். இன்னும் இரண்டு விக்கெட்களே தேவை என்ற நிலையில், இந்தியா துரிதமாக செயல்பட வேண்டும். சாம் கர்ரன் அதிக நேரம் நின்றால் ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்பதால் அவரை விரைவில் வீழ்த்த வேண்டும். இந்தியா சார்பில் ஷமி 3, இஷாந்த் 2, அஸ்வின், பும்ரா தலா 1 விக்கெட் எடுத்து இருந்தனர்.
தற்போது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 233 ரன்கள் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து. இந்தியா 300 ரன்களுக்குள் இங்கிலாந்தை ஆட்டமிழக்க செய்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை, இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால், இந்தியாவுக்கு சிறிது தடுமாற்றம்தான்.