மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி மான்செஸ்டரில் இன்று நடந்தது. இரண்டாவது டி-20 போட்டி, 6ம் தேதி இரவு 10 மணிக்கு கார்டிப்பில் நடக்கிறது. மூன்றாவது டி-20 போட்டி 8ம் தேதி இரவு 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் நடக்கிறது.
சமீபத்தில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. அணியின் பெரும்பாலான வீரர்கள் முழு பார்மில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் உள்ள இந்திய அணி சமீபத்தில் அயர்லாந்தை 2-0 என டி-20 தொடரில் வென்றது.
இன்று நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் டாஸை வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஜாசன் ராய் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லருடன் சேர்ந்து அவர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஜோஸ் பட்லர் அபாரமாக அடித்து விளையாடினார். 46 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 69 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்தார்.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2, ஹார்திக் பாண்டயா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவுக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி பேட்டிங் செய்த இந்தியா 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது. ஷிகார் தவான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார்.
பின்னர் ராகுலுடன் கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ராகுல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் கோஹ்லி 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.