கார்டிப்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 2 பந்துகள் மிச்சமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி, 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கே.எல். ராகுல் 101 ரன்கள் அடித்தார். ரோஹித் 32, கோஹ்லி 20 ரன்கள் எடுத்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், 2-வது டி-20 போட்டி கார்டிப்பில் இன்று நடந்தது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 5, ஷிகார் தவன் 10, ராகுல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னா ரன்களை குவித்தனர். 27 ரன்களுக்கு ரெய்னா, 47 ரன்களுக்கு கோஹ்லி ஆட்டமிழந்தனர். கடைசியில் தோனி 24 பந்துகளில் 32 ரன்களும், ஹார்திக் பாண்டியா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
149 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தின் ஜாசன் ராய், ஜோஸ் பட்லரின் விக்கெட்களை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். ஜோ ரூட்டின் விக்கெட்டை சாஹல் வீழ்த்தினார். அப்போது களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் கடைசி வரை விளையாடி, 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் இயான் மார்கன் 17, பிரிஸ்டோ 28 ரன்கள் எடுத்து உதவினர்.
மூன்றாவது டி-20 போட்டி 8ம் தேதி இரவு 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் நடக்கிறது.