இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது... 36 முறை சோதனை தொடருமா.. இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா!
லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை துவங்குகிறது. முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், இந்தியா தோல்வியை சந்தித்தது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. இங்கிலாந்தின் 20 விக்கெட்களையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். ஆனால், பேட்டிங்கில்தான் இந்திய அணி சொதப்பியது.

பேட்டிங் வரிசை மோசம்
கேப்டன் விராட் கோஹ்லி மட்டுமே 149 மற்றும் 51 ரன்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும் அரை சதத்தை எட்டவில்லை. அதனால் இன்று துவங்கும் போட்டியில் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதே கோஹ்லியின் முக்கிய வேலையாக இருக்கும்.

புஜாரா சேர்க்கப்படுவாரா
துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் ரன் எடுக்கத் திணறுகிறார். அதனால், இன்றைய போட்டியில் தவானுக்கு பதிலாக புஜாரா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தபட்சத்தில் கேஎல் ராகுல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.

ஜடேஜாவா குல்தீப்பா
லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்சத்தில் அஸ்வினுடன் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் அணியில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. 2014ல் இந்த மைதானத்தில் 3 விக்கெட் வீழ்த்தியுதுடன், பேட்டிங்கிலும் கலக்கிய ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதுவரை கோஹ்லி தலைமையில் 36 டெஸ்ட்களிலும் இந்திய அணி, வெவ்வெறு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.

தயாராக இங்கிலாந்து
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. டேவிட் மாலன் அணியில் இல்லை. வழக்கு விசாரணையால் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார். அவர்களுக்கு பதிலாக மோயின் அலியுடன், 20 வயதாகும் அறிமுக வீரர் ஆலிவர் போப்பும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications