லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா படுமோசமாகப் பந்துவீசிய நிலையில், அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20 அன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடியது. அப்போது அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது.

இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் விக்கெட் எடுக்காத போதும் ஓரளவு ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். ஆனால், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் என மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர்.
பிரசித் கிருஷ்ணா 10 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஒரு ஓவருக்கு 5.6 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் ரன்களை விட்டுக் கொடுத்தது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இது ஒருநாள் போட்டி அல்ல, இது டெஸ்ட் போட்டி எனும் நிலையில் அவரது பந்துவீச்சு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தேர்வு செய்யப்ப்பட்டிருக்க வேண்டும் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் அர்ஷ்தீப் சிங் கை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருக்கு இடம் அளிக்கப்படும் எனவும் ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் அது நடக்கவில்லை. பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்த பந்துவீச்சு கூட்டணி வேலை செய்யவில்லை. அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளர் எனும் நிலையில் அவர் ஆடி இருந்தால் நிச்சயம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வலது கை மற்றும் இடது கை பந்துவீச்சாளர்களை மாறி மாறி சந்திக்கும் போது திணறி இருக்க கூடும். அதனால் விக்கெட்டுகளும் கிடைத்திருக்கும்.
ஆனால் தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் 49 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இருக்கிறது. ஒரு ஓவருக்கு 4.2 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்து மிரட்டி இருக்கிறது.