துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி முதலாவதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியுடன் எந்த அணி இறுதிப் போட்டியில் மோத உள்ளது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இரண்டு அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குரூப் சுற்றில் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 48.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் இந்த இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. தென்னாப்பிரிக்கா அணி தற்போது வலுவான அணியாக காட்சி அளிக்கிறது.
அந்த அணி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில், இந்திய அணியிடம் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த இரண்டு அணிகளில் தென்னாப்பிரிக்காவே வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும். நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் எளிதாக இருக்கும் என இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.