ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்கிறது.
ஏற்கனவே, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மொத்தமாக வென்று அசத்திய, இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்போடு களமிறங்கியுள்ளது. அதேநேரம், பதிலடி கொடுக்கும் உத்வேகத்தோடு, ஜிம்பாப்வே அணியும் களமிறங்கியுள்ளது.

சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில், ரஹானே தலைமையில், ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடியது. முதல் போட்டியில், 4 ரன்கள், 2வது போட்டியில் 62 ரன்கள் மற்றும் மூன்றாவது போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகண்டது.
இவ்விரு அணிகளுக்கு நடுவேயான, இரு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர், இன்று தொடங்கியது. இன்றைய முதல் போட்டி ஹராரே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரையும் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே இந்தியாவுக்காக 5 வீரர்கள் முதல்முறையாக டி20 போட்டியில் களமிறங்கியுள்ளனர். மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அக்ஷர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோர் முதல்முறையாக இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.
இந்தியா மொத்தமாக 5 வீரர்களை புதுமுகங்களாக களமிறங்குவது இதுதான் முதல்முறையாகும். இதில் சந்திப் ஷர்மா தவிர்த்த மற்ற நால்வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆடிய அணியில் இடம் பெற்றவர்கள். அந்த அணியில் இடம்பெற்ற மனோஜ் திவாரிக்கு பதிலாக சந்தீப் ஷர்மா களமிறங்கியுள்ளார்.