கொழும்பு: டி20 உலகக் கோப்பை 2026 குரூப் ஏ போட்டியில், இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் இந்தியா வெற்றி பெறும் என்று பலரும் கணிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்பு இந்திய அணிக்கு சாதக, பாதக விளைவுகளையும் தரும் என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2024 பார்படாஸ் உலகக் கோப்பைக்கு பிறகு விளையாடிய அனைத்து டி20 தொடர்கள், போட்டிகளிலும் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு (3-1), நியூசிலாந்துக்கு (4-1) எதிரான தொடர் வெற்றிகள், இந்தியாவின் தற்போதைய ஃபார்மை உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஆசிய கோப்பை டி20யில், இறுதிப் போட்டி வெற்றியுடன் சேர்த்து, பாகிஸ்தானை மூன்று முறை தோற்கடித்ததும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இது குறித்து பேசிய கபில் தேவ் "இது நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நேபாளம் கிட்டத்தட்ட இங்கிலாந்தை வீழ்த்தியது, ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டி20 வடிவத்தில், சிறந்த முறையில் விளையாடி, பதற்றத்தை சிறப்பாகக் கையாளும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
இது ஒரு ஐந்து நாள் போட்டியோ அல்லது 50 ஓவர் போட்டியோ ஆக இருந்திருந்தால், இந்தியா பற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கை இருந்திருக்கும். ஆனால் டி20 வடிவத்தில், எட்டாவது இடத்தில் உள்ள ஒரு அணி சில நாட்களில் நம்பர் ஒன் அணியை எளிதாக வீழ்த்த முடியும்," என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பேட்டர் பசித் அலியும் இந்தியா இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என்றார். இது குறித்து பேசிய அவர், "நீங்கள் ஐந்து வயது குழந்தையைக் கேட்டாலும், அது இந்தியா தான் வெல்லும் என்றுதான் சொல்லும். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள்," என்று பசித் அலி கூறினார்.ஆனால், 55 வயதான பசித் அலி, பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் இருப்பால் இந்திய வீரர்கள் அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"பத்து ஆண்டுகளில் முதல் முறையாக, இந்திய வீரர்களும் பத்திரிகையாளர்களும் ஒரே ஒருவரால் – உஸ்மான் தாரிக் – அழுத்தத்திற்கு உள்ளாவதைக் காண்கிறேன். போட்டி தொடங்கும் முன்பே அவர் விளையாடாமலேயே பிரபலமானார்," என்றார்.30 வயதான உஸ்மான் தாரிக், கொழும்பில் அமெரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றிப் போட்டியில், 3/27 என்ற சிறந்த புள்ளிவிவரங்களுடன் தனது டி20 உலகக் கோப்பை அறிமுகத்தைப் பெற்று கவர்ந்தார்.