மும்பை: உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஜய் ஜடேஜாவை ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணி கொண்டு வந்தது. அஜய் ஜடேஜாவின் ஆலோசனையின் கீழ் ஆஃப்கானிஸ்தான் அணி மிகச்சிறந்த ஆட்டத்தை உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்தியது. ஐந்தாவது இடத்தில் முடித்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.
இதனிடையே இந்திய ஜாம்பவான் அஜய் ஜடேஜா ஒரு பைசா கூட பணம் பெறாமல் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக பணியாற்றியது பலருக்கும் வியப்பை அளித்தது. இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. அதற்கு முக்கியக் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிராவோ அமைந்தார்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பிராவோ பணியாற்றியது அந்த அணிக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும், அதன்பின் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
இதில் டெஸ்ட் போட்டி இந்தியாவிலும், ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதரை ஆஃப்கானிஸ்தான் அணி துணைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் 2018 முதல் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர்.
அதற்கு முன், 2008 முதல் 2014 வரை என்சிஏவில் ஃபீல்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங்கிற்கான துணைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர். அதேபோல் 2014ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். அதேபோல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
இதனால் ஸ்ரீதர் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியில் உள்ள ஸ்பின்னர்களுக்கு ஸ்ரீதரின் ஆலோசனைகள் நிச்சயம் சாதகமாக அமையும். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் வீரர்களின் ஃபீல்டிங் குறித்து அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனால் அதனை சரி செய்யும் வகையில் ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.