மும்பை: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன் டிராபி லீக் போட்டி நாளை நடக்கிறது. இதில் துவக்க வீரர் கம்பீர் களமிறங்குவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய அணி சமீபகாலமாக முன்னணி வீரர்களின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. ஷேவாக், ஜாகிர் கான் ஆகியோரது காயம் முழுமையாக குணமடையாத நிலையில் நேற்று பயிற்சியின் போது அடிபட்டதை அடுத்து துணை கேப்டன் யுவராஜூம் தொடரிலிருந்து விலகி கொண்டார்.
இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றிருக்கும் கம்பீரின் உடல்நிலை முழுமையாக குணமடையவில்லை. அவர் பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
இத்தொடருக்கு புறப்படும் முன்னதாகவே அவர் முழு உடல்தகுதி பெற்றுவிட்டார் என்பது மும்பையில் நடந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனால் தான் அவரை தென் ஆப்ரிக்கா அழைத்து வந்தோம். அவர் நாளை நடக்கும் போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என்றார்.
மேலும், யுவராஜ் வகித்து வந்த துணை கேப்டன் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது.