டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ரஹானேவின் சதம், அஸ்வினின் அரை சதம் உதவியுடன், 334 ரன்களை குவித்தது. அடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 121 ரன்களிலேயே சுருண்டு ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென் ஆப்பிரிக்காவைவிட 403 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது இந்தியா.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ரஹானே 127 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்ததன் உதவியோடு, இந்திய அணி 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் அப்பாட் 5 விக்கெட்டுகளையும், டேன் பியேட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வழக்கம்போல அந்த அணி சீட்டுக்கட்டு போல சரிந்தது.
அணியின் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி 121 ரன்களில் சுருண்டது. 213 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
முரளி விஜய் 3, தவான் 21, புஜாரா 28 ரன்களில் அவுட்டான நிலையில், கோஹ்லியும், ரஹானேவும் களத்தில் நங்கூரம் போட்டனர். ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 190 ரன்கள் எடுத்துள்ளது. கோஹ்லி 83 ரன்களுடனும், ரஹானே 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவைவிட 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கோஹ்லி மற்றும் ரஹானே சதங்களை கடப்பதற்காக இந்திய அணி காத்திருப்பதாக தெரிகிறது. சதம் கடந்ததும், டிக்ளேர் செய்ய இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டுவது பெரும் சவாலாகும்.