கான்யா: இந்தியா அணி கடைசி 10 ஆண்டுகளில் எந்தவொரு ஐசிசி உலகக் கோப்பையையும் வெல்லவில்லை. அதற்காக அவர்கள் மோசமாக ஆடினார்கள் எனச் சொல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 5 முறை இறுதிப் போட்டிக்குச் சென்ற போதிலும் அவர்களால் ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. அந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.. மழை காரணமாகப் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்துப் பேட் செய்த இங்கிலாந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது.

கடைசி கப்: இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. நம்ம அஸ்வின் தான் கடைசி ஓவரை வீசி இருப்பார். முதல் பந்து டட் பாலாக அமைந்த நிலையில், அடுத்த பந்து பவன்டரி சென்றது. இருப்பினும், அடுத்த 4 பால்கள் அவர் அட்டகாசமாக வீசியதால் அந்த ஓவரில் இங்கிலாந்து அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி நாம் வென்ற கடைசி ஐசிசி டிராபி இதுதான். அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் நாம் எந்த ஐசிசி டிராபியையும் வென்றது இல்லை. அதன் பிறகு பல்வேறு ஐசிசி தொடர்களில் நாம் ஐந்து முறை இறுதிச் சுற்றுக்குச் சென்றாலும் கோப்பையை வென்றதே இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ஐசிசி போட்டிகள் குறித்துப் பார்க்கலாம்.
தோல்விகள்: கடந்த 2014இல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது.. அதில் முதலில் பேட் செய்த இந்தியா 130 ரன்களை எடுத்தது. அடுத்துப் பேட் செய்த இலங்கை அவ்வப்போது விக்கெட்களை இழந்தாலும் இலக்கை நோக்கி சீராக முன்னேறியது. இதன் மூலம் இலங்கை அணி 18ஆவது ஓவரில் டார்கெட்டை அடைந்து வெற்றி பெற்றது.
அடுத்து 2017இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்தியா பவுலர்களை வெளுத்து வாங்கினார்கள். பாகிஸ்தான் அணி 338 ரன்களை எடுத்தது.
படுதோல்வி: தொடர்ந்து 339 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இருப்பினும், தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் தடுமாறினர். இறுதியில் இந்திய அணியால் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
கடந்தாண்டு இந்தியாவில் உலகக் கோப்பை நடந்த போது அதைக் கண்டிப்பாக இந்தியா வெல்லும் என்றே பலரும் நினைத்தனர். அதற்கேற்ப இந்திய அணி லீக் போட்டிகளில் எல்லா டீம்களையும் தும்சம் செய்தது. அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், இறுதிப் போட்டியில் வழக்கம் போல நமக்குத் தோல்வி தான்.
நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 50 ஓவர் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோஹித், கோலி மற்றும் ராகுல் மட்டுமே சிறப்பாக ஆடினர். அவர்களைத் தவிர வேறு யாருமே பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 240 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.
டெஸ்ட் தொடரிலும் தோல்வி: அடுத்துப் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை என்ற போதிலும் டிராவிஸ் ஹெட் நங்கூரம் பேல நின்று ஆடினார். அவர் மட்டும் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார். கடைசியில் மார்னஸ் லாபுசாக்னே நிதானம் காட்ட ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது தவிர டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இதைக் கதை தான். 2021இல் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 217க்கு ஆல் அவுட் ஆனது. அடுத்துப் பேட் செய்த நியூசிலாந்து 249 ரன்களை எடுத்தது. அடுத்து 2வது இன்னிங்கிஸில் இந்தியா வெறும் 179க்கு சுருங்கியது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.