கராச்சி: இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி நடந்து வருகிறது. இந்திய வீரர்களுக்கு ஏற்ற மாதிரியான பிட்ச் அமைக்கப்பட்டு அதில் அவர்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இது நியாயமற்றது என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் பலத்துக்கேற்ற வகையில் பிட்ச்சுகள் அமைந்திருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். இதற்கு ஐசிசிதான் காரணம் என்றும் சர்பிராஸ் கான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை நடந்த போட்டிகள், அதில் இந்தியா விளையாடிய போட்டிகளைப் பார்த்தாலே தெரியும். அவர்களுக்கு ஏற்ற வகையில் அவை தயாரிக்கப்பட்டிருப்பது புரியும்.
அதேசமயம், பாகிஸ்தான் அணி விளையாடிய பிட்ச் எல்லாமே அவர்களுக்கு சிரமத்தையே கொடுத்துள்ளது. அவர்களால் விளையாடவே முடியாத அளவுக்குத்தான் பிட்ச்சுகள் இருந்தன.
இப்போது விளையாடும் இதே இந்திய அணிதான் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் மற்றும் முத்தரப்புத் தொடரில் மோதியது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
இதுகுறித்து ஐசிசியுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச வேண்டும். புகார் தர வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். தனது எதிர்ப்பையும், ஆட்சேபனையையும் பாகிஸ்தான் பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஆனால் பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். இந்த விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஜிம்பாப்வே போட்டியில் பாகிஸ்தான் வென்றுள்ளது. அது மகிழ்ச்சி தருகிறது. சவாலான பிட்ச்சிலும் கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்றார்.