சண்டிமால் சதம் உதவியால் சரிவில் இருந்து மீண்டது இலங்கை! இந்திய வெற்றிக்கு 176 ரன்கள் இலக்கு
கொழும்பு: இலங்கை தனது 2வது இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், இந்திய அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலே நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 183 ரன்களில் சுருண்டது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்தியா தனது முதல் இன்னிங்சில் 375 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தவான் மற்றும் கோஹ்லி சதமும், விக்கெட் கீப்பர் சாகா அரை சதமும் விளாசினர்.
192 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான கருணாரத்னே மற்றும் குஷால் சில்வா ஆகிய இருவரும் டக்-அவுட் ஆகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
3ம் நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிகா பிரசாத் 3 ரன்களில் வெளியேறினார். வருண் ஆரோன் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார்.
அனுபவ வீரர் சங்ககாராவும், கேப்டன் ஆங்லோ மேத்யூசும் நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்தனர். இருப்பினும் சங்ககாரா 40 ரன்களிலும், மேத்யூஸ் 39 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை ருசிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
192 ரன்களுக்குள் இலங்கையை ஆல்-அவுட் செய்தால் இந்தியா, இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற நிலையில், கேப்டன் கோஹ்லி பவுலர்களை மாற்றி பார்த்தார். ஆனால், தினேஷ் சண்டிமால் மற்றும் திரிமன்னே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய எதிர்பார்ப்பு நடக்கவில்லை.
இலங்கை 367 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 176 ரன்கள் தேவை என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திரிமன்னே 44 ரன்கள், ஜெகன் முபாரக் 49 ரன்கள் மற்றும் ஆட்டமிழக்காமல் சண்டிமால் குவித்த 162 ரன்கள் உதவியுடன் இலங்கை இந்த ஸ்கோரை எட்ட முடிந்தது.
இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். முதல் இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததால், இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பேட்டிங் செய்ய சிரமமான காலே பிட்சில் 2வது இன்னிங்சை இந்தியா ஆரம்பித்தது. மொத்தம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் இன்னிங்சை போலவே, 2வது இன்னிங்சிலும் சோபிக்க தவறி 5 ரன்களில் அவுட் ஆனார். தவான் 13 ரன்களுடனும், 'நைட் வாட்ச்மேன்' இஷாந்த் ஷர்மா 5 ரன்களுடனும் களத்திலுள்ளனர். நாளை 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. எனவே போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications