துபாய்: 2016ம் ஆண்டு உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்த உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டிகளை வங்கதேசம் நடத்தியது. அந்த தொடரின் இறுதி போட்டியில், இந்தியா-இலங்கை அணிகள் மோதின. யுவராஜ்சிங் கடைசி நேரத்தில் ரன் அடிக்க தவறியது உள்ளிட்ட சில காரணங்களால் அப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இலங்கை சாம்பியனானது.
இந்நிலையில், ஆறாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2016ல் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று துபாயில் நடந்தது. இதில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டின், மார்ச் முதல் ஏப்ரல் வரை இப்போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது.