கராச்சி: பாகிஸ்தான் அணியுடன் விளையாடினால் இந்திய அணி தோல்வியடைந்துவிடுமோ என்று ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் அச்சத்தில் இருப்பதாக பிசிபி முன்னாள் தலைவர் நஜாம் சேதி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிலேயே கைவிடப்பட்டது. இதற்கு ஆசிய கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும், பிசிசிஐ-யும் காரணம் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நஜாம் சேதி குற்றம்சாட்டி இருந்தார். ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று கூறினோம்.

ஆனால் துபாயில் அதிக வெப்பம் இருக்கும் என்று இலங்கைக்கு மாற்றினார்கள் என்று நஜாம் சேதி தெரிவித்திருந்தார். இதனிடையே ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கொழும்புவில் இருந்து மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. குறிப்பாக துறைமுக நகரான ஹம்பந்தோட்டாவில் மாற்ற ஏசிசி ஆலோசித்ததாக கூறப்பட்டது. ஆனால் சூப்பர் 4 சுற்று திட்டமிட்டபடி நடக்கும் என்று பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் பிசிபி முன்னாள் தலைவர் நஜாம் சேதி தனது ட்விட்டர் பக்கத்தில், பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள சூப்பர் 4 ஆட்டம் நடக்கும் நாளன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதன் காரணமாக கொழும்புவில் இருந்து ஹம்பந்தோட்டா மைதானத்திற்கு மாற்றப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் கூறினர்.
ஆனால் திடீரென என்ன சிந்தித்தார்களோ தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் கொழும்புவில் நடக்கும் என்று தெரிவித்தனர். இந்த மாற்றத்தில் என்ன காரணம் என்றே புரியவில்லை. பாகிஸ்தான் அணியுடன் விளையாட இந்தியா அச்சப்படுகிறதா அல்லது தோல்விக்கு பயப்படுகிறதா? என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நாளன்று ஹம்பந்தோட்டாவில் 40 சதவிகித மழைக்கே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் அதே நாளன்று கொழும்புவில் 90 சதவிகிதம் மழைக்கு வாய்ப்பு இருப்பது தெரிய வருகிறது. இதனால் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமோ என்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.