ட்ரெண்ட்பிரிட்ஜ் : இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ்யை தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேலும் 22 ரன்களை சேர்த்து 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட் மற்றும் வோக்ஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.முதல் இன்னிங்ஸ்யை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை சிறப்பாக விளையாடியது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரிஷப் பந்த் 5 கேட்ச்களை பிடித்து அசத்தினார். மற்றொரு இந்திய வீரர் ராகுல் 3 கேட்ச்களை பிடித்தார். இங்கிலாந்து தரப்பில் பட்லர் அதிரடியாக ஆடி 39 ரன்களை குவித்தார்.இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் முன்னிலை பெற்றது.தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்துள்ளது.இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் கை இந்த போட்டியில் வலுவாக ஓங்கியுள்ளது. நாளை விரைவாக விளையாடி ரன்களை குவித்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதி.இதுவரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 100+ கூடுதலாக பெற்று தோல்வி அடைந்துள்ளது ஒரே ஒரு முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.