சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய விக்கெட்கள்
இரண்டாவது இன்னிங்க்ஸில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. முதலிலேயே முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், ராகுல் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து இந்திய வீரர்கள் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பொறுமையான ஆட்டத்தை கையில் எடுத்தனர். எனினும், எந்த பயனும் இன்றி தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. ரஹானே 13, புஜாரா 17, கோஹ்லி 17, தினேஷ் கார்த்திக் 0 என வெளியேறினர்.
இந்தியா 130 ரன்னுக்கு ஆல்-அவுட்
ஒரே ஒரு ஆறுதலாக அஸ்வின் மற்றும் பண்டியா 55 ரன்கள் வரை கூட்டணி அமைத்து ரன் எடுத்தனர். பண்டியா 26 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 159 ரன்கள் மற்றும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. விராட் கோஹ்லி தலைமையில் இதுவே முதல் இன்னிங்க்ஸ் தோல்வியாகும்.
இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 107
முன்னதாக, இந்த போட்டியின் முதல் நாள் மழையால் தடைபட்ட நிலையில், நான்கு நாள்கள் மட்டுமே போட்டி நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாம் நாளிலும் சில மணி நேரங்களே போட்டி நடந்தது. டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி மிக மோசமாக 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்கள் எடுத்தார்.
இங்கிலாந்து துவக்கத்தில் தடுமாற்றம்
இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 89-4 மற்றும் 131-5 என தடுமாற்றமான நிலையில் இருந்தது. மேல்நிலை பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், பேர்ஸ்டோ மற்றும் கிறிஸ் வோக்ஸ் இணைந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களை பிரிக்க இந்திய வீரர்கள் திணறினர். பேர்ஸ்டோ 93 மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஷமி மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். 289 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
ஆட்டநாயகன் வோக்ஸ்
தன் முதல் சதத்தை பதிவு செய்த கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் எடுத்திருந்த வோக்ஸ், இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து நான்கு விக்கெட்கள் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்துவீச்சுக்கு மூன்று பேர்
இந்திய அணியில் இரண்டு முழு நேர மற்றும் ஒரு பகுதி நேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசி வருகின்றனர். சுழலுக்கு களம் ஒத்துழைக்காத நிலையில், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தும், இந்த மூன்று பேர் கையில் தான் பந்து அதிகம் இருக்கிறது.
இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் சரியா?
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் ஒரு சுழல் பந்துவீச்சாளரே போதுமானது. ஆனால், முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு கிடைத்த விக்கெட்களை கணக்கில் கொண்டு, இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு இந்தியா இறங்கியது.
சுழலுக்கு வாய்ப்பே இல்லாத சூழ்நிலை
ஒரு வேளை வெப்பமான வானிலை இருந்தாலும் பிட்ச் வறண்ட பின் சுழல் பந்துகள் எடுபடும். அதே போல, இரண்டு - மூன்று நாட்கள் பந்து வீசிய பின் பிட்சின் நிலை மாறும் போதும் சுழல் எடுபடும். ஆனால், இந்த போட்டி தொடங்கும் முன்பிருந்து, மழையும், காற்றுமாக இருந்த நிலையில், மேற்கூறிய எந்த உத்தியும் வேலை செய்யாது. அதுவே இப்போதும் நடந்தது.
தவறான முடிவு
இப்படி இருக்க, இந்திய கேப்டன் விராட் கோஹ்லி லார்ட்ஸ் மைதானத்தில் எந்த நம்பிக்கையில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கினார் என்பது தெரியவில்லை. முதல் நாள் டாஸ் போடும் முன்பு இருந்தே மழை பெய்த நிலையில், கடைசி நேரத்தில் கூட இந்த முடிவை பற்றி யோசித்திருக்கலாம்.
புஜாராவுக்கும் அதிர்ஷ்டமில்லை
தவானுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட புஜாரா, ரன் அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார். அவர் மீது தவறு இல்லை என்றாலும், இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது அவரின் ரன் அவுட். முதல் போட்டியிலாவது முப்பது ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் எத்தனை பேர் என கணக்கிட முடிந்தது. தற்போது, இரண்டாவது போட்டியில், இருபது ரன்களை தாண்டியவர்கள் எத்தனை என எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த முறை ஒருவர் கூட முப்பது ரன்களை தாண்டவில்லை.
இலக்கு பெரிதானதால் தோல்வி
இங்கிலாந்து அணி 289 என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்ததால் டிராவுக்குக் கூட முயற்சிக்க முடியாமல் போனது. வெற்றியும் மிகக் கடினம் இங்கிலாந்தில் இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது.