மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றபோதும், இந்திய அணி அத்தொடரின் சிறந்த அணி இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன், கூறியுள்ளார். உலகக் கோப்பையின் சிறந்த அணியாக தென்னாப்பிரிக்கா தான் அவர் சுட்டிக்காட்டினார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்ற இந்தியா, இத்தொடரை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்று, மூன்று முறை T20 உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியானது. அரையிறுதியில் இங்கிலாந்தையும், இறுதிப்போட்டியில் நியூசிலாந்தையும் வீழ்த்தியது.

சூப்பர் எட்டில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணியின் வெற்றிப்பயணம் சில பின்னடைவை சந்தித்தது. மறுபுறம், தென்னாப்பிரிக்க அணி லீக் மற்றும் சூப்பர் எட் சுற்றுகளில் தோல்வியின்றி முன்னேறி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் மட்டுமே தோற்றது.

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசிய ஹார்மிசன், "அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடியே இறுதிப்போட்டியை இந்தியாவுக்கு வென்றது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பும்ராதான் ஒட்டுமொத்தப் போட்டியிலும் வித்தியாசத்தை ஏற்படுத்தினார். இந்திய அணி இத்தொடரில் சிறந்த அணி இல்லை. தென்னாப்பிரிக்காதான் சிறந்த அணி. இந்தியா சிறந்த 'தருண அணி'. அவர்கள் சிறந்த தருணங்களை வென்றனர்," என்றார்.
"லீக் சுற்றுகளில் அவர்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று நான் நினைக்கிறேன். அதற்குப் பிறகு, அவர்கள் தருணங்களை வென்றனர். காலிறுதியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக தடுமாறினார்கள். தங்களது முக்கிய தருணங்களில் ஜொலிக்கும் வீரர்களால், சிறப்பாக விளையாடாத போதும் இந்தியா வெல்வதற்கு ஒரு வழியைக் கண்டறிந்தது," என்றார்.
"ஃபின் ஆலன் ஒருநாள் அபாரமாக விளையாடிய ஒரு ஆட்டத்தைத் தவிர, தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்காதான் மிகவும் நிலையான அணியாக இருந்தது. முக்கிய தருணங்களில் அழுத்தத்தைச் சமாளித்து செயல்படுத்துவதில், இந்தியா மற்றவர்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டது," எனவும் ஹார்மிசன் குறிப்பிட்டார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த இரண்டு T20 உலகக் கோப்பைகள், 2025 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி வெள்ளைப் பந்துப் பட்டங்களை வென்றது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை 10 போட்டிகளில் வென்ற பிறகு ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இந்த வெள்ளைப் பந்து ஆதிக்கம் குறித்து பேசிய ஸ்டீவ் ஹார்மிசன், "இந்தியாவில் போட்டிகள் தொடர்ந்து நடக்கும் வரையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். சிறந்த அணி, திறமையான வீரர்கள் மட்டுமல்லாமல், சொந்த மண்ணிலேயே விளையாடும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது. பிசிசிஐ, ஐசிசி-யை விட சக்திவாய்ந்ததாக இருப்பதால், இந்தியாவிற்கு எதிராக பெரிய குறைகள் ஏதுமில்லை," என்று கருத்து தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு முதல் நடந்த நான்கு ஐசிசி வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில், இந்தியா பங்கேற்று முடிவடைந்த 33 போட்டிகளில், இரண்டில் மட்டுமே தோல்வியடைந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.