மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ஏராளமான திறமைகள் நிறைந்த வீரர்கள் இருந்தாலும், நம்பகமான 'ஃபினிஷர்களின்’ எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தச் சூழலில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா, இந்திய டி20 அணியில் தேர்வானபோது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால், சில காரணங்களால், 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டார்.
அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் உடனடியாக எந்த ஒரு கருத்தையும் ஜிதேஷ் ஷர்மா தெரிவிக்கவில்லை. இருப்பினும், தேர்வுக்குழுவிடமிருந்து இதுபற்றி எந்த முன்னறிவிப்பும் வரவில்லை என்று அவர் கூறினார். தனது பெயர் அணியில் இல்லாததைக் கண்டு மிகவும் மனம் உடைந்ததாக, ஜிதேஷ் தெரிவித்தார்.

அணி மாற்றங்களுக்கான காரணத்தை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கிய பின்னரே ஜிதேஷுக்கு முழு விவரம் புரிந்ததாகவும் அவர் கூறினார். "அணி அறிவிக்கப்படும் வரை எனது நீக்கம் குறித்து எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் பிறகு, தேர்வாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்.
அது ஒரு சரியான காரணம். பின்னர், பயிற்சியாளர்களுடனும் தேர்வாளர்களுடனும் நான் உரையாடினேன், அவர்களின் விளக்கமும் நியாயமாகத் தோன்றியது. அவர்கள் எனக்கு என்ன விளக்க விரும்பினார்கள் என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொண்டேன், அதை நான் ஏற்றுக்கொண்டேன்" என ஜிதேஷ் குறிப்பிட்டார்.
ஜிதேஷுடன் சேர்த்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் சுப்மன் கில்லும் தேர்வுக் குழுவால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதே சமயம், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர். இச்சூழ்நிலையிலிருந்து மீண்டுவர, முன்னாள் இந்திய மற்றும் RCB நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் பேசியதாக ஜிதேஷ் கூறினார்.
"ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் விளையாட நான் மிகக் கடுமையாக உழைத்ததால், இது மிகவும் மனவேதனையாக இருந்தது. ஆனால், இது விதி என்பதை நான் மறுக்க முடியாது. அந்த நேரத்தில், நான் முற்றிலும் உணர்ச்சியற்று இருந்தேன், எதையும் செய்ய முடியவில்லை. எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பதும், தினேஷ் கார்த்திக்கிடம் பேசுவதும் எனக்கு முன்னேற உதவியது" என்று ஜிதேஷ் தெரிவித்தார்.