இங்கிலாந்துக்கு எதிராக நாளை டி20 போட்டி! வெற்றியுடன் திரும்புமா இந்திய அணி?
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியாக டி20 பந்தையம் நாளை நடக்கிறது. வெற்றியுடன் தாயகம் திரும்ப இந்திய அணி முயற்சிப்பதால் ஆட்டத்தில் அனல் பறப்பது நிச்சயம்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தோற்றபோதிலும், ஒருநாள் போட்டி தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இவ்விரு அணிகளுக்கும் நடுவேயான ஒரேயொரு டி20 பந்தையம் ஞாயிற்றுக்கிழமையான நாளை நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ஒருநாள் தொடர் மற்றும் டி20 ஆகிய இரு வகை போட்டிகளில் வென்ற திருப்தியுடன் தாயகம் திரும்ப முடியும் இந்திய அணி.
எனவே வெற்றியை வசப்படுத்த இந்திய அணி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதே நேரம், ஒருநாள் தொடரில் அடைந்த படுதோல்விக்கு பழி தீர்க்க இங்கிலாந்தும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது நிச்சயம். டி20 போட்டிகளுக்கு ஸ்டூவர்ட் பிராட்தான் இங்கிலாந்து அணியின் கேப்டன். இருப்பினும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவருக்கு பதிலாக இயான் மோர்கன் இங்கிலாந்தின் கேப்டனாக பதவி வகிப்பார்.
பிர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications