சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை தொடரில் ஒரேயொரு முறை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாடியுள்ளது.
1987ஆம் ஆண்டு அக்.9ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்த உலகக்கோப்பை தொடர் தான் முதல்முறையாக 50 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்டது. அதற்கு முன் வரை 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆலன் பார்டர் தலைமையிலும், இந்திய அணி கபில் தேவ் தலைமையிலும் களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் பூன் - ஜெஃப் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்க்க, டேவிட் பூன் 49 ரன்களில் ரவி சாஸ்திரி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் வந்த டீன் ஜோன்ஸ் மட்டும் 39 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெஃப் மார்ஷை மட்டும் இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக ஆடிய அவர் 141 பந்துகளில் ஒரு சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் மனோஜ் பிரபாகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இந்திய அணி தரப்பில் சுனில் கவாஸ்கர் - கிறிஸ் ஸ்ரீகாந்த் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 69 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் கவாஸ்கர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் நவ்ஜோத் சிங் - ஸ்ரீகாந்த் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது.
சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் சொந்த மண்ணில் அரைசதம் கடந்து, 83 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் நவ்ஜோத் சிங் சித்து 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 207 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் பின்னர் வந்த திலீப் வெங்சர்கார் 29 ரன்களும், அசாருதீன் 10 ரன்களிலும், கேப்டன் கபில் தேவ் 6 ரன்களிலும், ரவி சாஸ்திரி 12 ரன்களிலும், கிரண் மோரே 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக கபில் தேவ் மற்றும் ரோஜர் பின்னி இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி நேரத்தில் 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மனோஜ் பிரபாகர் ஆட்டமிழக்க, இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 4 ரன்கள் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் 49.5வது பந்தில் மனிந்தர் சிங் 4 ரன்களில் ஸ்டீவ் வாஹ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது ரசிகர்களின் நெஞ்சில் ஆறாத வடுவாக மாறியது. இந்த காயத்திற்கு மருந்து போடுவதற்கு இந்திய அணிக்கு 36 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.