ஹராரே: முதல் ஒரு நாள் போட்டியில் மயிரிழையில் தோல்வியிலிருந்து தப்பிய இந்திய அணி இன்றைய 2வது ஒரு நாள் போட்டியிலும் பெரிய ஸ்கோரை எடுக்கத் தவறியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தும் கூட பின்னால் வந்தவர்கள் சரிவர அதைப் பயன்படுத்தவில்லை. இதனால் 300 ரன்களைக் கூடத் தொட முடியாமல் போனது இந்தியா.
இன்றைய ஆட்டத்தின் சிறப்பு தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரஹானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் போட்ட அரை சதங்கள்தான். முதல் போட்டியில் சதமடித்த அம்பட்டி ராயுடு இன்று 41 ரன்களைச் சேர்த்தார்.

முன்னதாக இன்றும் ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பராவே டாஸ் வென்றார். இந்தியாவை முதலில் பேட் செய்ய அவர் பணித்தார். முதல் போட்டியிலும் கூட இப்படித்தான் ஜிம்பாப்வே டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானேவும், முரளி விஜய்யும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்து வந்தனர். ரஹானே 63 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார். மறு முனையில் முரளி விஜய் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் அம்பட்டி ராயுடு மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினார். அவரது பங்கு 41 ஆகும்.
மனீஷ் திவாரி 22, ராபின் உத்தப்பா 13 ரன்களும் எடுத்Lனர். ஸ்டூவர்ட் பின்னி சற்று அதிரடியாக ஆடி 25 ரன்களைக் குவித்தார்.
இறுதியில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது.
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.