2020 ஐபிஎல்.. 5 டெஸ்ட் மேட்ச்.. மொத்தமாக இந்திய அணியை குத்தகைக்கு எடுக்கும் ஆஸி.. அதிரடி திட்டம்!
சிட்னி : ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. விரைவில் அங்கே விளையாட்டுத் தொடர்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
இந்த நிலையில், கடும் பாதிப்பில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு வருமானத்தை ஈட்ட இந்திய அணியை வைத்து திட்டம் போட்டு வருகிறது.
முதலில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஐந்து டெஸ்ட் போட்டிகளாக மாற்ற திட்டமிட்ட ஆஸ்திரேலியா, 2020 ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில் வளமான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் அமைப்புகளே சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் குறைவு
இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் குறைந்து வருகிறது. துவக்கத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10, 20 ஆக குறைந்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் 927 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு விரைவில் விளையாட்டுப் போட்டிகளை துவக்க உள்ளது. அங்கே ரக்பி மற்றும் கிரிக்கெட் தான் பிரபலமான விளையாட்டுக்கள். முதலில் ரக்பி தொடர் துவங்கும் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் துவங்கக் கூடும்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிக்கல்
விளையாட்டுப் போட்டிகள் துவங்குவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்புக்கு மகிழ்ச்சி என்றாலும், அந்த அமைப்பு வருவாய் இழப்பால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. விரைவில் பெரிய தொடர்களை நடத்தி மீளா விட்டால் பெரும் சிக்கல் ஏற்படும்.

டி20 உலகக்கோப்பை தொடர் நடக்குமா?
குறிப்பாக அக்டோபரில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் மற்ற நாடுகள் தங்கள் வீரர்களை அனுப்புமா? என்ற கேள்வி உள்ளது.

இந்தியாவை டெஸ்ட் தொடர்
இந்த நிலையில், நவம்பரில் நடக்க உள்ள இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு. மேலும், நான்கு டெஸ்ட் போட்டிகளை, ஐந்தாக மாற்றவும் பிசிசிஐ-யுடன் பேசி முயற்சி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடர் வாய்ப்பு
டி20 உலகக்கோப்பை நடக்காமல் போனால், ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் உள்ள கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை கூட ஆஸ்திரேலியாவில் நடத்த முடியும். அது குறித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு, பிசிசிஐ-யிடம் பேச வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள்
ஐபிஎல் தொடருக்கு பிற நாட்டு வீரர்கள் வர மறுத்தாலும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க முடியும். இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை வைத்தே ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்த முடியும்.

ஹோட்டல் தயார்
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தின் அருகே ஒரு புத்தம் புதிய நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது அது செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும். இந்திய அணி வீரர்கள் தங்களை 14 நாட்கள் தனிமையில் வைத்துக் கொள்ள அந்த ஹோட்டலை முழுவதுமாக அளிக்க ஹோட்டல் நிர்வாகம் முன் வந்துள்ளது.

இந்தியா செல்லும் முதல் நாடு?
இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் இந்திய அணி கொரோனா வைரஸ் பாதிப்பிற்குப் பின் செல்லும் முதல் வெளிநாடாக ஆஸ்திரேலியா இருக்கும். அங்கே ஐபிஎல் நடக்க சாத்தியக்கூறுகள் குறைவு என்றாலும் டெஸ்ட் தொடர் நடக்க வாய்ப்பு அதிகம்.


Click it and Unblock the Notifications