மும்பை : 2024 டி20 உலககோப்பையை இந்தியா வெல்லும், அதற்கு நான் சத்தியம் செய்கிறேன் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதற்கு பிறகு, இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இது தான் கடைசி உலககோப்பை என்பதால் வெற்றியுடன் செல்ல வேண்டும் என்ற உத்வேகமும் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ஐபிஎல் தொடரை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்துவார்கள் என்று பிசிசிஐயும் கருதுகிறது. இந்த நிலையில், டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் பரிந்துரை பட்டியலில் உள்ள 2 வீரர்கள் சொதப்புவது ரசிகர்களுக்கு வேதனையை தந்துள்ளது.

ரிஷப் பண்ட் என்ற அதிரடி மன்னன், டி20 உலககோப்பைக்கு திரும்புவார் என் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 2022 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட் உடல் தகுதியோடு இருந்த போதும், அவரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய நிர்வாகம் முன்வரவில்லை. தினேஷ் கார்த்திக் தான் அந்த இடத்தில் இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர் ஆதவன், ரிஷப் பண்டின் கிரிக்கெட் பலம் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு பலவீனமும் இருக்கிறது. Slice & cut shot விளையாடுவதில் அவருக்கு இருக்கும் பிரச்சனை, batting stance ல் உடல் மொத்த எடையும் பின் காலில் இருப்பது என இப்படியான விஷயங்களால், ஆப் சைடு வெளியில் பந்தை வீசுவதை எல்லோரும் அவருக்கான திட்டமாகவே வைத்திருக்கிறார்கள்.
இதனால் ரன் பிரஷர் அதிகம் இருக்கும் டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக தடுமாறுகிறார். டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான தேர்வில் இவரை எந்த அளவிற்கு பரிசீலிப்பார்கள் என்பது முதல் குழப்பம்.
அடுத்து தன்னுடைய ரிதத்தை இழந்து, தன்னுடைய ஆயுதமான யார்க்கர் பந்துகளை இழந்திருக்கும் அர்ஸ்தீப் சிங் இரண்டாவது குழப்பம். டி20 கிரிக்கெட்டுக்கு எனத் தொடர்ந்து இவரை தயார்படுத்தி வந்து, திடீரெனக் கழட்டி விடுவது பெரிய சர்ச்சைகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் கடைசி வாரத்தில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதற்குள் மாற்று வீரர்களை ஐபிஎல் தொடரிலிருந்து தேர்வுக்குழு தேட வேண்டிய நிலையில் உள்ளது.