இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஜனவரி 21 அன்று நாக்பூரில் தொடங்கும் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கு, காயம் காரணமாக விலகியுள்ள திலக் வர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ராபின் உத்தப்பாவின் யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், "ஸ்ரேயாஸ் ஐயரின் சுழற்பந்து மற்றும் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறனை பாராட்டினார். “மூன்றாவது இடத்திற்கு ஸ்ரேயாஸ் சந்தேகமே இல்லாமல் சரியான நபர். சுழற்பந்து வீச்சை மிக நன்றாக எதிர்கொள்ளும் திறன் அவரிடம் உள்ளது. அவர் பெரிய ஷாட்களை ஆட முடியும், பந்தையும் திறமையாக நகர்த்தி அடிக்கக்கூடியவர்.

கடந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் வேகப்பந்து வீச்சாளர்களை அருமையாக எதிர்கொண்டதைப் பார்த்தோம். பும்ராவின் யார்க்கர் பந்தில் அவர் அடித்த அந்த ஷாட் எனக்கு நினைவிருக்கிறது.”“அது மும்பை vs பஞ்சாப் போட்டி. பும்ரா வீசிய யார்க்கரை ஆஃப்-சைடில் பவுண்டரிக்கு அனுப்பினார். பும்ராவின் யார்க்கரைத் தாக்குப்பிடிப்பதே கடினம். ஆனால் இவரோ நிதானமாக ஆடி, பந்தை தாமதமாக அணுகி, விரும்பிய இடத்திற்குச் சரியாக திசையமைத்து ரன்களை ஈட்டினார். ஃபீல்டர் எங்கே என்பதை அறிந்து, ஸ்கோரிங் ஷாட்களை உருவாக்குகிறார்,” என்றார்.
திலக் வர்மா திரும்பினாலும், ஐயருக்கு அணியில் இடமிருக்க வேண்டும் என பதான் வலியுறுத்தினார். சூர்யகுமார் யாதவின் தடுமாற்றத்தையும், ரிங்கு சிங்கின் ஃபார்ம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பளித்தால், நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார். அவரது திறமை மிகச் சிறப்பானது. தோல்வியடைவது அரிது. திலக் வர்மா மீண்டும் வந்த பிறகும் அவருக்கு அணியில் இடமளிக்க வேண்டும், ஏனெனில் அவர் நமக்குத் தேவையான வீரர்.”
“சூர்யா ஃபார்மில் இல்லை, இல்லையா? ரிங்குவின் ஃபார்ம் குறித்துத் தெரியாது. மிடில் ஆர்டர் மற்றும் கீழ் வரிசையில் தொடர்ச்சியாக ரன்களைக் குவிக்கும் ஒரே பேட்ஸ்மேன் ஹர்திக் மட்டுமே. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தொடங்கினால், ஒன்று அல்ல, இரண்டு வீரர்கள் தேவைப்படுவார்கள், ஏனெனில் விக்கெட்டுகள் விழும்,” என்றார் பதான்.ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 51 டி20 போட்டிகளில் 8 அரைசதங்களுடன் 1,104 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில், இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவின் நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக ராபின் உத்தப்பா கூறினார். இது குறித்து பேசிய உத்தப்பா, "சூர்யகுமாருக்கு ரன்கள் குறைவாக இருப்பது நம்பிக்கையைப் பாதித்துள்ளது. ஆனால் அதற்குக் காரணம், அவர் பல இடங்களில் விளையாடியதுதான். ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் எவ்வளவு ரன்கள் குவிக்கிறீர்களோ, அவ்வளவுதான் நீங்கள் சிறந்தவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு, காரணம் எதுவாக இருந்தாலும், மக்கள் பொறுமையை இழந்து புள்ளிவிவரங்களைக் காட்டத் தொடங்குவார்கள். அது அவருக்கு இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டது,” என்றார்.
சூர்யகுமார் நான்காம் இடத்திலேயே பேட் செய்ய வேண்டும் என உத்தப்பா வலியுறுத்தினார். பவர்ப்ளேவுக்கு வெளியே அவர் திறம்பட செயல்படுவார், சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளித்து வேகமாக ரன்கள் குவித்து, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் விளக்கினார்.2025 டி20களில் சூர்யகுமார் யாதவ் 3வது, 4வது இடங்களுக்கு இடையே மாறி மாறி ஆடினார். 19 இன்னிங்ஸ்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து, 13.62 சராசரியுடனும் 123.16 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் ஏமாற்றமளிக்கும் முடிவுகளைப் பதிவு செய்தார்.