ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 289 ரன்கள் விளாச வேண்டிய கட்டாயத்துடன் உள்ளது.
ட்ரினிடாடில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 365 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. 4வது நாளில் 32 ஓவர்களும், 5வது முழுமையான ஆட்டம் இருப்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் - தேஜ்நரைன் சந்தர்பால் களமிறங்கினர். முதல் ஓவர் முதலே இருவரும் விக்கெட்டை பறிகொடுத்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

இந்திய அணியின் சிராஜ், முகேஷ் குமார், உனாத்கட் என்று அனைவரும் விக்கெட்டுக்காக முட்டிமோதினர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களோ ரன்கள் சேர்க்காமல் இருந்தாலும் பரவயில்லை, விக்கெட் மட்டும் விட்டுவிட கூடாது என்ற கவனத்துடன் விளையாடினர். 10 ஓவர்கள் கடந்தும் விக்கெட் வீழ்த்த முடியாததால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அஸ்வின் - ஜடேஜா இருவரையும் ஒரே நேரத்தில் அட்டாக் செய்ய வைத்தார்.
இதன் பலனாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் 28 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மெக்கன்சி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இளம் வீரர் தேஜ்நரைன் சந்தர்பால், கிட்டத்தட்ட புஜாராவை போல் விளையாட தொடங்கினார்.

அவரது ஆட்டம் இந்திய வீரர்களின் பொறுமையை அதிகமாக சோதித்தது. இன்னொரு பக்கம் பிளாக்வுட் பவுண்டரிகளை விளாசி ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் உயர தொடங்கியது. இறுதியாக 4வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்துள்ளது. தேஜ்நரைன் சந்தர்பால் 98 பந்துகளில் 24 ரன்களுடனும், பிளாக்வுட் 39 பந்துகளில் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 298 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளது. மழை குறுக்கிடாமல் இருந்தால், ஆட்டத்தில் நிச்சயம் முடிவு எட்டப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டிராவுக்காக விளையாடுவதால், இந்திய ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.