டெல்லி: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களும், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 121 ரன்களும் எடுத்த நிலையில், 213 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது.
இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோஹ்லி 88 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரஹானே சதம் அடித்ததும், இந்திய அணி 267 ரன்னில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ரஹானே 100 ரன்களிலும், சாகா 23 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சிலும் சதம் அடித்த ரஹானே இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 481 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா இன்றைய ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் 91 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் பொறுமை காட்டியும், கேப்டன் ஆம்லா, 207 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து அதைவிட அதிக ஆமை வேகத்திலும், ஆடியபடி ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாளை ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இல்லையேல் ஆட்டம் டிரா ஆக வாய்ப்புள்ளது.
இன்றைய இரு விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.