மும்பை: இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
இதில் ஒருநாள் தொடரை நினைத்து தான் இந்திய ரசிகர்கள் பலரும் பதற்றத்தில் உள்ளனர். ஏனெனில், கடந்த 44 ஆண்டுகளாக இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றது இல்லை. சில ஒருநாள் போட்டிகளை மட்டுமே இங்கிலாந்து அணி வென்று இருக்கிறது.

இந்த நிலையில், சமீப காலமாக கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மாவின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதே போல, இந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்து விடுமோ? என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி தோல்விகளை அதிகமாக சந்தித்து உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் ரோஹித் சர்மா தான் கேப்டன். இதே காலகட்டத்தில் ரோஹித்தின் கேப்டன்சியும் மோசமாக இருந்துள்ளது.
கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே ரோஹித் சர்மா கேப்டனாக இரண்டு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். அதை தவிர்த்து பார்த்தால், இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் என ரோஹித் சர்மா கேப்டனாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்திருக்கிறார்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராகவும், ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் பங்கேற்ற மூன்று தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தோல்வி அடைந்தது. இலங்கை மண்ணில் 27 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் தொடரை இழந்து அதிர்ச்சி அளித்தது.
அதன் பின் இந்திய மண்ணில் முதன்முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் முதன்முறையாக ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இழந்தது.
இந்திய அணி பத்து ஆண்டுகளில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இப்படி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து செயல்படும்போது எல்லாம் இந்திய அணி பெரிய தொடர்களை இழந்து இருக்கிறது.
அதுபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்து 44 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனையை செய்யுமா? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.