வதோரா: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வதோதராவில் நடந்த இப்போட்டியில், இந்திய அணி 301 ரன்கள் இலக்கை 49 ஓவர்களில் எட்டி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் இச்சாதனை வெற்றிக்கு, நட்சத்திர வீரர் விராட் கோலி 91 பந்துகளில் 93 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 71 பந்துகளில் 56 ரன்களும் எடுத்தனர். சதம் அடிக்கும் வாய்ப்பை 9 ரன்களில் இழந்த கோலிக்கு அவரது சிறப்பான ஆட்டத்திற்காக 'ஆட்ட நாயகன்' விருது கிடைத்தது.

இத்தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், இந்திய ஒருநாள் அணி புதிய உலக சாதனையைப் படைத்தது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் இலக்கை 20 முறை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா தற்போது பெற்றுள்ளது. இங்கிலாந்து 15 முறையும், ஆஸ்திரேலியா 14 முறையும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
300 ரன்கள் இலக்கை அதிக முறை துரத்திப் பிடித்த அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் (12), நியூசிலாந்து மற்றும் இலங்கை (தலா 11) ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. 2023 முதல் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்கு இது எட்டாவது தொடர் வெற்றியாகும். சொந்த மண்ணில் 2017 முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா எட்டாவது நேர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025-க்குப் பிறகு ஒன்பது தொடர் வெற்றிகளுக்குப் பின், நியூசிலாந்து இப்போட்டியில் தோல்வியைத் தழுவியது. 301 ரன்களைத் துரத்தியது, ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது பெரிய வெற்றிகரமான இலக்காகும். 2010-ல் பெங்களூருவில் 316 ரன்களைத் துரத்திப் பிடித்தது இதில் முதலிடத்தில் உள்ளது.
நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதித்யா அசோக் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்திய மண்ணில் இந்தியாவின் ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற தனிப்பட்ட சாதனையை ஜேமிசன் படைத்தார்.
இச்சாதனையை முதலில் நிகழ்த்தியவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி மெக்காய். அவர் நவம்பர் 28, 2010 அன்று கவுகாத்தியில் இதைச் செய்தார். அக்டோபர் 22, 2017 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், ட்ரென்ட் போல்ட் (10 ஓவர்களில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்) இப்பட்டியலில் இணைந்தார்.