2027 உலககோப்பை கிரிக்கெட் தொடர்.. இந்திய அணியில் குழப்பம்.. தொடர் வெற்றியை ருசிக்காத சுப்மன் கில்
மும்பை: 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான திட்டமிடுவது தொடர்பாக இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடர் பல மூத்த வீரர்களின் கடைசி சர்வதேசப் பயணமாக அமையக்கூடும் என்பதால், இது இந்திய அணி நிர்வாகத்திற்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது.
முந்தைய உலகக்கோப்பையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பிறகு, இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்த்த அளவு ஆதிக்கம் செலுத்தவில்லை. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ இந்திய அணி வென்றாலும், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஏற்பட்ட தோல்விகள் அணி நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கேப்டனாக சுப்மன் கில் தனது முதல் ஒருநாள் தொடருக்கான வெற்றியைத் தேடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் அவரது தலைமையிலான அணி தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 6 அன்று இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது டி20 அணிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. அணி நிர்வாகத்திற்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே தெளிவான புரிதல் தேவைப்படுகிறது. 2027 உலகக்கோப்பைக்கான திட்டமிடலில் தெளிவு பெறுவதற்காக, சில மூத்த வீரர்கள் பிசிசிஐ (BCCI) அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அணியில் உள்ள சீனியர் வீரர்களைக் கையாளும்போது சுப்மன் கில் அதிக அதிகாரம் கொண்ட அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து தனது சொந்த கேப்டன்ஷிப் பாணியை உருவாக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகி சுட்டிக்காட்டியுள்ளனர்.
"அணியில் இவ்வளவு பெரிய வீரர்கள் இருக்கும்போது, டிரெஸ்ஸிங் ரூமில் கில் தனது கருத்துகளை உறுதியாக முன்வைக்க வேண்டும். மற்ற இரண்டு வடிவங்களை விட, ஒருநாள் போட்டிகளுக்கான திட்டமிடலில் கம்பீர் அவ்வளவு தீவிரமாக ஈடுபடவில்லை," என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. "இப்போது உலகக்கோப்பைக்கான தயாரிப்பில் கவனம் திரும்பியுள்ளதால், கம்பீரும் கில்லும் பொறுப்பேற்றுத் தங்கள் ஆலோசனைகளை அணியினரிடம் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்" என்றும் பிசிசிஐ ட்டாரம் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications

