மிர்பூர்: 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 233 ரன்களில் சுருட்டிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் இன்று துவங்கியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டில் வங்கதேச அணியை இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு மிர்பூரில் துவங்கியது. டாஸ் வென்ற வ ங்கதேச அ ணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. இந்தியாவின் பந்துவீச்சை 73.5 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்த வங்கதேச அணி 233 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.முதலில் களமிறங்கிய தமீம் இக்பால் மற்றும் இம்ருல் கயஸ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். ஜுனெய்ட் சித்திக், ரகிபுல் ஹசன் ஆகியோர் முறையே 7 மற்றும் 4 என ஒற்றை இலக்க ரன்களை சேர்த்தனர்.இவர்களுக்கு பின்னர் களமிறங்கிய மஹமத்துல்லா மட்டும் 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 156 பந்துகளை சந்தித்த இவர் சரியான ஜோடி கிடைக்காமல், மலமலவென எதிர் விக்கெட்டுகள் சரிந்ததால் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.முகமது அஷ்ரஃபுல் 39 ரன்களும், கேப்டன் ஷாகிப்அல்ஹசன் 34 ரன்களும், ரஹீம் 30 ரன்களும் சேர்த்தனர்.ஷஹாதத் ஹுசைன் 8, ஷஃபியுல் இஸ்லாம் 9, ருபெல் ஹுசைன் 4 என மற்றவர்களும் ஒற்றை இலக்கை ரன்களே எடுத்தனர்.இதனால் பிற்பகலில் 73.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேச அணி இழந்தது.இந்திய பவுலர்களில் இஷாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாகீர்கான் 3, ஓஜா 2, ஹர்பஜன் 1 விக்கெட்டுகளை கழற்றினர். யுவராஜ் இரண்டு பந்துகள் வீசி 6 ரன்கள் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து இந்திய அணியினர் கவுதம் கம்பீரும், வீரேந்தர் ஷேவாக்கும் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 69 ரன்கள் எடுத்துள்ளது.ஷேவாக் 40 பந்துகளில் 41 ரன்களும் (6 பவுண்டரி), கம்பீர் 38 பந்துகளில் 26 ரன்களும் (4 பவுண்டரி) எடுத்து விளையாடிவருகின்றனர்.காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்காத கேப்டன் தோனி தற்போது களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.