நாட்டிங்ஹம் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ரஹானே, கோஹ்லி அரைசதம் எடுக்க நாள் முடிவில் 307 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவக்கத்தில், அஸ்வின், ரிஷப் பண்ட் சீரான வேகத்தில் ரன்களை எடுக்கத் துவங்கினர். இந்தியா 323 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட் 24 ரன்களுக்கு, ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில் போல்டானார்.
அவரைத் தொடர்ந்து அஸ்வின், முஹமது ஷமி, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 329 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டது.
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியில் கோஹ்லி 97, ரஹானே 81 எடுத்த ரன்கள் மட்டுமே இந்திய அணி முந்நூறு ரன்களை தாண்ட காரணம். இவர்களுக்கு அடுத்து அதிக ரன் எடுத்தவர் தவான். அவர் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். சென்ற போட்டியில் ஒரு பந்து கூட வீசாத அதில் ரஷித், இந்த போட்டியில் 9 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்.
இவர்களில் கிறிஸ் வோக்ஸ் இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அணியில் தன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இந்திய இன்னிங்க்ஸ் முடிந்ததை அடுத்து இங்கிலாந்து தன் முதல் இன்னிங்க்ஸை ஆடி வருகிறது.