லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ரன்களுக்கு சுருண்டது. அஸ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் ஆன்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், இந்தியா தோல்வியை சந்தித்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று ஆட்டம் துவங்கியது. ஆனால், இடை இடையே மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழைக்கு இடைப்பட்ட நேரத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் அதிகபட்சமாக 29 ரன்களும், விராட் கோஹ்லி 23 ரன்களும் எடுத்தனர்.
மழையால் மைதானம் ஸ்விங் பவுலிங்குக்கு சாதகமாக அமைந்தது. ஜேம்ஸ் ஆன்டர்சன் 13.2 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.