மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள், இப்போது வெறும் கிரிக்கெட்டாக இல்லாமல், அரசியல் பிரச்சாரக் களமாக மாறி வருவதால், இனிவரும் காலங்களில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளைக் குறைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதெர்டன் கூறி இருந்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கிட்டத்தட்ட நிராகரித்துள்ளது.
"இதையெல்லாம் பற்றிப் பேசுவது சுலபம், ஆனால் இதற்கு ஸ்பான்சர்களும், ஒளிபரப்பாளர்களும் சம்மதிக்க வேண்டுமே?" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியிருப்பது, இந்த விவகாரத்தின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதாவது இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லை என்றால் உலகக்கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களை நடத்துவதே சிரமம் என கூறி இருக்கிறார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு நடைபெற்ற 2025 ஆசியக் கோப்பைத் தொடர், தொடக்கம் முதலே சர்ச்சைகளின் மையமாக இருந்தது. இந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை மோதியது, இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்தது, அதற்காக நக்வி பரிசளிப்பு விழாவை பாதியில் புறக்கணித்து கோப்பையுடன் சென்றது போன்ற நிகழ்வுகளால்தான், மைக்கேல் அதெர்டன் போன்றோர், "ஐசிசி, பணத்திற்காக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளைத் திணிப்பதை நிறுத்த வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்தனர்.

அதெர்டனின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இந்த விவகாரத்தில் எளிதாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.
"இதையெல்லாம் பற்றிப் பேசுவது சுலபம். ஆனால், ஸ்பான்சர்களும், ஒளிபரப்பாளர்களும் இதற்கு சம்மதிப்பார்களா? இன்றைய சூழலில், இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு பெரிய அணி ஒரு தொடரிலிருந்து விலகினாலும், அந்தத் தொடருக்கு ஸ்பான்சர்களை ஈர்ப்பது மிகவும் கடினம்," என்று அந்த அதிகாரி ஒரு பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ அதிகாரியின் இந்தப் பதில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது விளையாட்டு என்பதைத் தாண்டி, எவ்வளவு பெரிய வர்த்தக சந்தையாக இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த ஒரு போட்டிக்காகப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்யப்படுவதால், ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களின் சம்மதம் இல்லாமல் ஐசிசியோ அல்லது பிசிசிஐயோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.