ரசிகர்களை கவர்ந்த போட்டிகள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றாக இருந்த காலகட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களை இந்த இரு அணிகளும் பங்கேற்கும் போட்டிகள் வெகுவாக கவர்ந்திருந்தன.
பரஸ்பரம் போட்டிகள் இல்லை
இந்த இரு நாடுகளும் பல நாடுகள் பங்கேற்று ஆடும் தொடர்களில் பங்கேற்று ஆடி வருகின்றன. ஆயினும், இருநாடுகளும் பரஸ்பரம் கடந்த 2013ல் தான் ஆடின. அப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, 3 சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் மோதியது. இதேபோல கடந்த 2008ம் ஆண்டில் இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் மோதின.
ரசிகர்கள், வீரர்கள் கோரிக்கை
இருநாட்டு உறவு மற்றும் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படாத நிலையில், இருநாடுகளும் பங்கேற்கும் தொடர்களை நடத்த வேண்டும என்று நீண்டநாட்களாக ரசிகர்கள், வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் யுவராஜ்சிங் மற்றும் சாகித் அப்ரிடி ஆகிய வீரர்கள், கிரிக்கெட் போட்டிகளிலேயே இந்தியா -பாகிஸ்தான் போட்டிகள் சிறப்பானவை என்று தெரிவித்துள்ளனர்.
மீண்டும் போட்டிகளை நடத்த வேண்டும்
இந்நிலையில், தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், இந்தியா -பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருநாடுகளுக்கிடையில் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற வர்த்தகங்களும், டென்னிஸ், கபடி போன்ற பிற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும்போது, ஏன் கிரிக்கெட்டை மட்டும் நடத்தக்கூடாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏமாற்றம் அளிக்கிறது -அக்தர்
இருநாட்டு உறவு முறையாக இல்லாததாக கருதினால், அப்போது வர்த்தகத்தையும், மற்ற விளையாட்டுகளையும் கூட நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள அக்தர், அரசியலுடன் எப்போதுமே கிரிக்கெட்டை இணைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இருநாட்டின் வேற்றுமைகளால் கிரிக்கெட் பாதிக்கப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடுநிலையான இடத்தில் நடத்தலாம்
பாகிஸ்தானுக்கு இந்தியா வரமுடியாது, இதேபோல பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வரமுடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அக்தர், இருநாடுகளும் ஆசியா கோப்பை மற்றும் சாம்பியன் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடங்களில் விளையாடுவதை போல இருநாடுகள் மட்டுமே பங்கேற்கும் தொடரையும் நடுநிலையான இடத்தில் நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அக்தர் நம்பிக்கை
பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை சமீபத்தில் அங்கு இந்திய கபடி குழுவினர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்து விளையாடி நிரூபித்துள்ளனர். இதை மீறியும், சந்தேகம் இருந்தால், இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது ஒன்றே தீர்வு என்றும் அக்தர் கூறியுள்ளார்.