மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேரடியாக மோதுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு இணையாக எந்த ஆட்டமும் ஈடாக இருக்காது. ஒவ்வொரு பந்துக்கும் பரபரப்பு பதற்றமும் எகிறும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு சென்றது.

ஆனால் பிசிசிஐ தரப்பில் ஆசியக் கோப்பை போட்டிகளை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ கோரிக்கையை ஏற்றது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் 4 போட்டிகளையும், இலங்கையில் 9 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை இரவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை கசிந்துள்ளது. அதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் செப்.2ஆம் தேதி மோத உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் இடம்பிடித்துள்ளன.
இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதனால் சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படி இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், செப்.10ஆம் தேதி மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடக்க வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் செப்.17ஆம் தேதி நடக்கும் போட்டியிலும் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 3 போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் உறுதியாகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல் இந்த ஆசியக் கோப்பைத் தொடர் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.