துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான பதற்றமான அரசியல் சூழலுக்கு மத்தியில், நடக்கும் போட்டி என்பதால் களத்திற்கு வெளியே பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்தப் போட்டிக்கு துபாய் காவல்துறை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும், இரு அணிகளின் ரசிகர்களுக்கும் கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என துபாய் காவல்துறை சார்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, துபாய் காவல்துறை மற்றும் நிகழ்வுகள் பாதுகாப்புக் குழு (ESC) இணைந்து, மைதானத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கான மிகக் கடுமையான விதிகளை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய துபாய் காவல்துறை செயல்பாட்டுப் பிரிவு உதவித் தளபதியும், ESC-யின் தலைவருமான மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு சிறப்புப் படைப்பிரிவுகள் களமிறக்கப்பட்டுள்ளன. மைதானத்திலோ அல்லது வெளியிலோ எந்தவிதமான இடையூறுகள் ஏற்பட்டாலும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்துகொண்டாலும், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும்" என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் விளையாட்டு வசதிகள் மற்றும் நிகழ்வுகள் பாதுகாப்புக்கான மத்திய சட்டத்தின் கீழ், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
முறையான அனுமதியின்றி மைதானத்திற்குள் நுழைதல்: 1 முதல் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அத்துடன், 5,000 முதல் 30,000 திர்ஹாம்கள் (சுமார் 1.2 லட்சம் முதல் 7.2 லட்சம் ரூபாய் வரை) அபராதமும் விதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லுதல்: பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், லேசர்கள், குடைகள், பெரிய கேமராக்கள், செல்ஃபி ஸ்டிக்ஸ், கூர்மையான பொருட்கள், நச்சுப் பொருட்கள், கொடிகள், பேனர்கள், செல்லப்பிராணிகள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், ஸ்கேட்போர்டுகள், மற்றும் கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றை மைதானத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினாலும் மேற்கூறிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பொருந்தும்.
வன்முறை மற்றும் இனவெறியில் ஈடுபடுதல்: மைதானத்தில் வன்முறையில் ஈடுபடுவது, மற்றவர்கள் மீது பொருட்களை வீசி எறிவது, இனவெறி அல்லது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 30,000 திர்ஹாம்கள் (சுமார் 7.2 லட்சம் ரூபாய்) வரை அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு ESC சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளது: