பாலக்கலே: பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி வீசிய பந்தில் விராட் கோலி போல்டாகியதை இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கும் இடையிலான மோதல் ஊரறிந்த ஒன்றாகும். ஐபிஎல் தொடரின் போது இருவரும் மோதிக் கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது முதலே கவுதம் கம்பீர் விராட் கோலி மீது அதிகப்படியான விமர்சனங்களை முன் வைத்தார்.

அதில் பெரும்பாலான விமர்சனங்கள் சரியாக இருந்தாலும், ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அதிகப்படியான விமர்சனங்கள் வந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷாகின் அப்ரிடி வீசிய பந்தில் இன்சைட் எட்ஜாகி விராட் கோலி போல்டானார்.
இதனால் விராட் கோலியை ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினார்கள். விராட் கோலியை "சோக்லி" என்று ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டு செய்தனர். முக்கியமான ஆட்டத்தில் விராட் கோலி "சோக்"காவதை வழக்கமாக வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் விராட் கோலி ஒருநாள் போட்டியில் களமிறங்கியதால், இதுபோன்ற சிறிய தவறுகள் நடப்பது சகஜமே என்றும் சிலர் கருத்திட்டனர்.
ஆனால் வர்ணனையில் இருந்த கவுதம் கம்பீர் விராட் கோலி ஆட்டமிழந்ததை காட்டமாக விமர்சித்துள்ளார். அதில், விராட் கோலி ஆட்டமிழந்த பந்தில் எந்த ஷாட்டையும் ஆடவில்லை. அவர் ஃபார்வர்ட் ஷாட்டுக்கும் போகவில்லை, டாட் பால் ஆக்கவும் முயற்சிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஷாகின் அப்ரிடி போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது இதுபோன்ற பிரச்சனைகள் தான் அதிகம் வரும். அதனை கூட புரிந்து கொள்ளாமல் விராட் கோலி விக்கெட்டை கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.