கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 94 பந்துகளில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க கூடாது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாடிய நாட்களிலும் சரி, ஓய்வுக்கு பின்னான நாட்களிலும் சரி, சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் கவுதம் கம்பீர். அண்மையில் கூட தோனி மற்றும் விராட் கோலியின் பெயர்களை கூறி ரசிகர்கள் கோஷமிட்டதால் கோபமடைந்த கம்பீர், அவர்களை நோக்கி நடுவிரலை காட்டி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அதற்கு விளக்கமும் அளித்தார்.

ஏற்கனவே தோனி பற்றி கம்பீர் கூறி வந்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தோனியை விடுத்து விராட் கோலியை விமர்சிப்பதை கம்பீர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதம் விளாசினார். 94 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 122 ரன்களை விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கொழும்பு மைதானத்தில் 260 ரன்களே போதுமான இலக்காக இருந்த நிலையில், விராட் கோலி அபார ஆட்டம் இந்திய அணிக்கு புதிய தெம்பை கொடுத்தது. இதன்பின் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கே சுருண்டது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இருப்பினும் பேட்டிங்கில் அசத்திய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க கூடாது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் பேசுகையில், என்னை பொறுத்தவரை ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். விராட் கோலி, கேஎல் ராகுல் இருவரும் சதம் விளாசி இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து தான் சொல்கிறேன். ஆனால் வெறும் 8 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என்றால் கூட விட்டுவிடலாம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களால் ஸ்பின்னர்களை எளிதாக விளையாட முடியும். ஆனால் அவர்களுக்கு எதிராகவே குல்தீப் யாதவ் மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார். அங்கு தான் குல்தீப் யாதவ் திறமை உள்ளது. உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் மூவராலும் ஆட்டத்தின் எந்த சூழலிலும் விக்கெட் வீழ்த்த முடியும் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.