கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று மதியம் மீண்டும் தொடரப்பட உள்ள நிலையில், கொழும்புவில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் விராட் கோலி - கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் அதிகமாக சாரல் மழை பெய்ததால், மைதானம் பாதிக்கப்பட்டது. பின்னர் மைதானத்தை சரி செய்து ஆட்டத்தை தொடங்கலாம் என்று ஆலோசித்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டது.
இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடரப்படவுள்ளது. இந்த நிலையில் கொழும்புவில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. அதிகாலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே காலை 9.30 மணியளவில் கொழும்புவில் மழை சற்று குறைந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் கொழும்பு வானிலை ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் திட்டமிடப்படி தொடங்கினாலும் மீண்டும் மாலையில் மழை பெய்ய 90 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் டே இருந்தாலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. மாலை மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தவும் நடுவர்கள் திட்டமிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.