கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது மழை பெய்ததால், "ரிசர்வ் டே"வான நாளை ஆட்டம் தொடரப்படும் என்று நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதன்பின் விராட் கோலி - கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது.
சரியாக மாலை 4.55 மணிக்கு மழை பெய்ய தொடங்கிய நிலையில், உடனடியாக மைதானத்தின் முக்கிய பகுதிகள் தார்பாயால் மூடப்பட்டது. இருப்பினும் ஸ்கொயர் லெக் மற்றும் பாய்ண்ட் திசையில் மழையால் அதிகளவு பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யவே மைதான ஊழியர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனிடையே நடுவர்கள் 7.30 மணிக்கு ஒருமுறை, 8 மணிக்கு ஒருமுறை மற்றும் 8.30 மணிக்கு ஒருமுறை என்று தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் ஆட்டம் 9 மணிக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 9 மணிக்கு தொடங்கினால் 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் 8.45 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் நடுவர்கள் இன்றைய நாளிற்கான ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய ஆட்டம் மீண்டும் 3 மணிக்கு தொடங்கப்படும் என்றும், இந்திய அணி 24.1 ஓவர்களில் இருந்து பேட்டிங்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படவில்லை என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளையும் தொடரவுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.