கொழும்பு: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 357 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது
இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கீடு ஏற்பட்டது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் மழை பெய்ததால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது.

இதன்பின் இந்திய அணியின் விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் பேட்டிங்கை தொடர்ந்தனர். மீண்டும் மழை வந்தால் டிஎல்எஸ் விதிமுறை அமலுக்கு வர வாய்ப்பிருப்பதால், கேஎல் ராகுல் அதிரடியாக ஆட தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக விராட் கோலி அடக்கி வாசித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 33 ஓவர்கள் முடிவிலேயே 200 ரன்களை கடந்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 60 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின் கேஎல் ராகுலின் ஆட்டம் வேற லெவலுக்கு சென்றது. ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட முயற்சி செய்தார். அதேபோல் இன்னொரு பக்கம் விராட் கோலி பவுண்டரி விளாசி தனது ஆட்டத்தை தொடங்கினார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 55 பந்துகளில் அரைசதம் கடந்தார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது.
இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். ஆனால் விராட் கோலி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு இரண்டு ரன்களாக ஓடியே எடுக்க தொடங்கினார். 43வது ஓவரை வீசிய இஃப்திகார் அஹ்மத் பந்துவீச்சில், சிக்சர், பவுண்டரி என்று விராட் கோலி வெளுத்து கட்டினார். இதன் மூலம் இவரின் பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களை கடந்தது.
இருவரும் களத்தில் ருத்ரதாண்டவம் ஆட, 45 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 100 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 6வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இவர் சதம் விளாசிய அடுத்த 3 பந்துகளில் விராட் கோலியும் தனது 47வது அரைசதத்தை விளாசி தள்ளினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 77வது அரைசதமாகும்.
49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 338 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கடைசி ஓவரை வீச ஃபஹீம் அஷ்ரப் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் விராட் கோலி டிவில்லியர்ஸ் ஸ்டைலில் ஒரு பவுண்டரியும், தனது ஸ்டைலில் ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் தோனி ஸ்டைலில் சிக்சர் அடித்து மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கேஎல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.