பாலக்கலே: ஆசியக் கோப்பைத் தொடரில் நடைபெற்று வந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 11, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14 , சுப்மன் கில் 10 என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் காரணமாக இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் இணைந்த இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா இணை இந்திய அணியை மீட்டெடுத்தது. சிறப்பாக ஆடிய இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 81 பந்துகளில் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்கள் விளாசினர்.
இறுதியாக இந்திய அணி 48.5 ஓவர்களுக்கு 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பேட்டிங் முடிவடைந்த போதே மழை பெய்ய தொடங்கியது. இதனால் மைதானம் முழுக்க விரிப்புகள் விரிக்கப்பட்டு கவர் செய்யப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால், இரவு 9 மணிக்கு நடுவர்கள் பரிசோதனை செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு ஆட்டம் தொடங்கினால், டிஎல்எஸ் விதிகளின் படி இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 40 ஓவர்கள் 239 ரன்களும், 30 ஓவர்களில் 203 ரன்களும், 20 ஓவர்களும் 155 ரன்களும் இலக்காக சொல்லப்பட்டன. ஆனால் மழை மட்டும் நின்றபாடில்லை.
இதனால் 9.50 மணி வரை பொறுத்திருந்த நடுவர்கள், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் பரபரப்பு நிறைந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியிலேயே கைவிடப்பபட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.