பாலக்கலே: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4வது அரைசதம் விளாசி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மழை பெய்யும் என்பது தெரிந்த போதும், எதிரணியில் ஷாகின் அப்ரிடி இருக்கிறார் என்பது தெரியும் பேட்டிங் செய்ய தீர்மானித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடக்கம் சரியாக இருந்த போதும், கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த விராட் கோலி 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவர் முதல்முறையாக பேட்டிங் வரிசையில் 5வது வீரராக களமிறங்கியதால், இவரும் ஆட்டமிழப்பார் என்றே பார்க்கப்பட்டது.
ஆனால் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் சிக்சர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஷடாப் கானை வைத்து பாகிஸ்தான் அணி அட்டாக் செய்த போது, அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். இவருடன் ஹர்திக் பாண்டியாவும் நம்பிக்கையாக விளையாட இந்திய அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்தது.
இவர்கள் இருவரும் விக்கெட் கொடுக்காமல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த, வேறு வழியில்லாமல் ஷாகின் அப்ரிடியை அட்டாக்கில் கொண்டு வந்தார் பாபர் அசாம். ஆனால் அவர் பந்துவீச்சிலும் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்க, வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் அணி ஸ்பின்னர்களுடன் மீண்டும் அட்டாக் செய்தது. ஆனால் அசராத இஷான் கிஷன், சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி 3 அரைசதம் விளாசி அசத்தினார் இஷான் கிஷன். தற்போது இந்தப் போட்டியிலும் அரைசதம் விளாசியுள்ளதால், தொடர்ச்சியாக 4 அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து வருவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.