கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.
இது இந்திய ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆசிய கோப்பைத் தொடர் உலக கோப்பைக்கு முன்பு நடைபெறுவதால் இதனை ஒரு முன்னோட்டமாக ரசிகர்கள் கருதினர்.

இந்த ஆசிய கோப்பை தொடரிலே பலமான அணி என்றால் அது பாகிஸ்தான் தான். ஏனென்றால் உலகின் முதல் நிலை அணியாக இந்த தொடரில் களமிறங்கியது. இந்த நிலையில் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறினாலும் ஹர்திக் பாண்டியா, இசான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடி 266 ரன்கள் என்ற இலக்கை எட்ட உதவினர்.
இந்த நிலையில் அந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாச இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தங்களுடைய பேட்டிங்கை தொடங்கினார்கள். எங்ககிட்டயும் ஆயுதம் இருக்கு என்று கே ஜி எஃப் படத்தில் வரும் டயலாக் போல், எங்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என இந்தியா இன்று கெத்து காட்டியது. பும்ரா,ஷர்துல் தாக்கூர்,சிராஜ், ஹர்திக் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதில் பெரிய ஹைலைட் குல்தீப் யாதவின் பந்துவீச்சு தான். குல்தீப் ஒரு பந்தை கூட பாகிஸ்தான் வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. தொடக்க வீரர் ஃபக்கர் சமானை கிளீன் போல்ட் ஆக்கினார். இதேபோன்று நடு வரிசை வீரர் சல்மானை எல் பி டபிள்யு ஆகிய குல்திப் யாதவ் சதாப்கான் விக்கெட்டையும் ஆறு ரன்களில் கைப்பற்றினார்.
இதனால் குல்தீப் யாதவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வருகின்றனர். தற்போது உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் நிலையில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் குல்தீப் சிறப்பாக செயல்படுவார் என்பதால் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.